போராளிகளின் வார்த்தைகள்


Clashes erupt between Palestinian protesters and Israeli soldiers
ஒரு நாள் நாங்கள் நிச்சயம் மரணிப்போம். ஆகவே மரணத்தை கண்டு நாங்கள் அஞ்சவில்லை..

ஒரு நாள் நீங்களும் மரணிக்கத்தான் போகிறீர்கள். ஆகவே உங்களை கண்டும் எங்களுக்கு அச்சமில்லை..

நாங்கள் அஞ்சுவது யாதெனில் மரணத்தருவாயில் எங்கள் கண்களில் மரணத்தின் பீதி இருக்க கூடாது என்பது தான்..

போராளிகளின் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும்.

மரணத்தை கண்டு மாவீரர்கள் அஞ்சுவதில்லை..!!

Source:
Via Fb

 

தட்டுயில்லா பிச்சைக்காரர்கள் ..!!


குறிப்பு : நாட்டில் பாத்திரம் ஏந்தும் சில பாத்திரங்கள் பற்றிய ஒரு தொகுப்பு ,
இது யார் மனதையும் புண்படுத்துமாறு அமைந்தால் – மன்னியுங்கள் ,

(இது ஒரு சில மனித பூச்சிகளை பற்றி மட்டும் , நீங்கள் பூச்சி என்றால் ஆவேசப்படவும்)

நன்றி ,
சிறுவயது முதல் பிச்சைக்காரர்களின் – அடையாளமாய் ,
மனதில் பதிந்த உருவம் இன்று உருமாறியது ,

என்றும் தட்டு ஏந்தி திரியும் பிச்சைக்காரர்கள் – இன்று ,
நாகரிகமுற்றனரோ என்று வியக்கும் படி உள்ளது – இன்றைய ,
தட்டுயில்லா பிச்சைக்காரர்களின் அணுகுமுறை ,

— முதலில் இவர்தாம் ,
பெயர் தான் காவலாளி – ஆனால் ,
உண்மையில் களவானி ,
தெருக் கோடியில் நிற்கும் – ஒரு பேடி ,

காலம் தவறாமல் வேலை செய்வதுண்டு ,
காவல் கடமையில் சிறக்க அல்ல ,
மக்கள் உடைமைகளை சட்டம் சொல்லி பறிக்க ,

கடற்கறையிலும் பூங்காவிலும் தெருவிலும் – இப்படி ,
கை ஏந்தா இடமில்லை – உன்மை பிச்சைக்காரரை காட்டிலும் ,
இன்று மிகுந்த நிலை – இவர்களுக்கு ,

— இரண்டாம் நிலையில் – உள்ளதை ,
ஊக்கமாய் கொண்டு – முதல் நிலைக்கு ,
முயற்சி செய்யும் கும்பல் – இது ,

கூட்டம் கூட்டமாய் வந்து – நம்மை ,
மோசம் செய்து – நம் ஓட்டை வாங்கி – பின் ,
ஓட்டம் இடும் கயவ கும்பல் ,

ஐந்து ஆண்டு திட்டத்தில் – ஐந்து முறை கூட ,
ஓட்டு போட்டவரை பார்க்காத – நம் ,
ஜனநாயகத்தின் நாயகர்கள் இவர்கள் ,

ஒரு ஓட்டுக்கு ஓர் ஆயிரம் என – நாம் ,
செய்த சிறு தவறினால் – நம் ,
வீட்டின் கூரையையும் இவன் – சூறையாடுகிறான் ,

வேண்டாம் இனி ,
இந்த வெள்ளை வேட்டி அணிந்த – கோட்டை ,
பிச்சைக்காரர்கள் ,

— ஒருவன் முற்றும் பெறும் இடம் – இது ,
ஆதலாலே இதற்கு மூன்றாம் இடம் ,

நீ அள்ளி தந்தால் – நான் ,
கல்வி தருவேன் – இல்லையேல் ,
தள்ளி விடுவேன் – எனும் ,
பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகமே ,

பிச்சைக்காரர் பிள்ளை பயில வந்தாலும் – அவர்களிடம் ,
பிச்சை எடுக்கும் உங்கள் எச்சி குணம் – என்று ,
மாறும் ,
அந்த மாற்றம் வரும் வரை – இங்கு ,
டீ கடை பையணும் – டேபிள் பாயும் (boyum) ,
வேலை ஒய்வு பெற்று – கல்வி ,
தாகம் தீர மாட்டார்கள் ,

— நான்காம் நிலை பெற – தகுதியுற்றவன் ,
ஆன்மீகம் எனும் புனிதத்தை புதைத்தவன் – இவன் ,

ஆம் ,
நம் ஆன்மீக நம்பிக்கையை கொண்டு – நம்முள் ,
நயவஞ்சகமாய் வந்த ஒரு நச்சு – இவன் ,

அடே – போலி சாமிகளே ,
காவியில் பாவம் செய்யும் பாவிகளே – கேளுங்கள் ,

எங்கள் அமைதி தான் உங்களின் அனுமதி – அதை ,
வெகுமதியாய் கொண்டு – வந்த வழி ,
ஓடி விடுங்கள் – இல்லையேல் எங்கள் ,
நாளைய சமுதாயம் – உங்கள் ,
தலை முடியை பிடித்து மரியாதை செய்யும் – புரிந்துகொள் ,

கடைசி இடம் இது – ஒரு ,
பரதேசி கூட்டம் ,

பரதேசி என்பதால் – செல்வம் இல்லாதவன் என்றில்லை ,
இறை குடுத்த அனைத்து தச்சனைகளையும் வாங்கி – பின் ,
வரதட்சனைக்கு ஏங்கும் கூட்டம் தான் ,

உழைக்க வக்கில்லா – சிலர் ,
தேடுவது ஒரு – மலர் (பெண்) ,
காரணம் ,
அந்த மலர் வளர்ந்த செடியின் (பெண்ணின் அப்பா) செழிப்பை ,
வேரோடு வேறு இடம் மாற்றும் மனம் கொண்டு ,

இந்த மனம் கொண்ட அந்த சிலர் – மாறினால் தான் ,
இரண்டு மணம் ஒன்றுசேரும் அந்த தருணம் – ஒரு ,
உண்மை திரு – மணம் என்போம் ,

உதவ கரங்கள் உள்ளதை மறந்து ,
உதவாக்கரங்களாய் திரியும் – இந்த ,
யாசிக்க யோசிக்கா கரங்கள் – வேண்டாம் ,
இனியாவது – மாற்றம் காண்போம் .

– ஜெயராமச்சந்திரன் ர

Source:
http://jrrkavithai.wordpress.com

காதல் ♥


Love

கண்ணை பார்த்து வருவதுதான் காதல்
என்றால்!
பார்வை இல்லாதவர்களுக்கு காதல்
வராதா?

நிறத்தை பார்த்து வருவதுதான்
காதல் என்றால்!
கருப்பானவர்களுக்கு காதல் வராதா?

அழகை பார்த்து வருவதுதான் காதல்
என்றால்!
அழகில்லாதவர்கள் காதலிக்க
முடியாதா?

பணத்தை பார்த்து வருவதுதான் காதல்!
என்றால்
ஏழைகளுக்கு காதல் வராதா?

இடத்தை பார்த்து வருவதுதான் காதல்!
என்றால்
இடமில்லாதவனுக்கு காதல் வராதா?

பேச்சின் அழகை கண்டு வருவதுதான்
காதல் என்றால்!
ஊமையனுக்கு காதல் வராதா?

படிப்பை பார்த்து வருவதுதான்
காதல் என்றால்!
படிக்காதவனுக்கு காதல் வராதா?

உண்மையில் காதல் என்பது என்ன?

அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும்
ஒரு இதயத்திற்கு
உண்மையான
அன்பு எங்கிருந்து பெறப்படுகிறத
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான
உறவுக்கு பெயர் தான் காதல் ♥  ♥

Source:
Via Fb (www.facebook.com/pages/உறுத்தும்-உண்மைகள்)

“திரு’ – வாசகம்!


1.ஆறறிவு படைத்தவர்கள் சொல்கிறார்கள்,
“இந்தப் பெண்கள் போத்திக்கொண்டு போனால்
பிரச்சினையே இருக்காது…”

தாம் அய்ந்தறிவு படைத்ததற்காய் நிம்மதி பெருமூச்சு விடுகின்றன
அம்மணமாய்த் திரியும்
ஆடு, மாடு, கோழிகள்…

2.பேசுகிறாய்…“பிரா நூல் தெரிவதால்
என்னைத் தூண்டுகிறது”என்று

பறக்கும் பைக்கின் வெற்றுடம்பில் பூணூல் தெரிகிறது,
எந்தப் பெண்ணும் பிராண்டியதாய்
தகவல் இல்லை!

3.ஒன்றுக்கும் குனியமுடியவில்லை பெண்,
உற்றுப் பார்க்கிறான்.
என்னத்தைச் சொல்ல!

பால் கொடுக்கும் நாய்
பதறி ஓடுது.

4.வெறித்துப் பார்ப்பதில் வேறெந்த மிருகமும் இப்படியில்லை…
கருவே கலையும்படி
இருக்கிறதவன் கண் புணர்ச்சி!

5.எதிரே வரும் ஆண் புலி பார்த்து
எந்தப் பெண் புலியும் அஞ்சுவதில்லை,

பக்கத்தில் வரும் பன்றியைப் பார்த்து
எந்தப் பன்றியும் நடுங்குவதில்லை,

உடனுறையும் பாம்பைப் பார்த்து
எந்தப் பாம்பும் பயப்படுவதில்லை,

பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம்
பள்ளிச்சிறுமியை விட பயப்படுகிறாள் பெண்.

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

6.விளக்குமாறு தொட்டு வீடு கூட்ட மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

நான் தின்ன தட்டை நானே கழுவ மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

பெத்தப் பிள்ளையாயிருந்தாலும் காலு கழுவி விடமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

முக்கியமா, என் ஜட்டியை நானே துவைக்கமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

எந்தப் பொண்ணப் பாத்தாலும்
லுக்கு விடுவேன்,
எந்திரிச்சக் கையோட – பெண்ணை
நோட்டம் விடுவேன்,
ஏன்னா நான் ஆம்பள!

ஒன்று தெரியுமா?
வயிற்றிலே உதைத்தப் போதும்
வளர்த்துவிட்டு
உன்னை கருவிலேயே கலைக்காமல்
இவ்வளவுக்கும் பிறகு
சோற்றிலே விசம் வைக்காமல்
உன்னை விட்டு வைத்தாளே
அவ பொம்பள!

கெடுக இப்பாழ் சிந்தை!

7.காவிப் பாம்பு வேதம் ஓதுகிறது,
“அண்ணா” என அழைத்திருந்தால்
அந்த மாணவியை
விட்டிருப்பார்களாம்,
டெல்லி காமுகர்கள்.

அதை உன் சீதை செய்திருந்தால்
ராமாயணமே இல்லையடா!
தொலைந்திருக்கும்
ராம நாமத் தொல்லையடா!

“பையா, பையா” எனக் கை கூப்பி
கதறிய பெண்களை
பர்தாவைக் கிழித்துக் குதறிய
ஆர்.எஸ்.எஸ், மிருகங்களே
யாருக்கு உபதேசம்!

8.போலிசை வைத்து
பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்!
லேடிஸ் ஆஸ்டலுக்கு
வாட்ச்மேன் சங்கராச்சாரியா?
மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர்
நித்யானந்தாவா?

குற்றத்தை விட,
தீர்வு பயங்கரம்!

9.படுக்கவும், சுகிக்கவும்
நீ சிதைக்கவுமோ பெண்?
மனித இனத்தையே
படைத்தவள், காத்தவள் பெண்ணடா!
அவள் மட்டும்
ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணடா!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
ஏன் உன் கடவுளுக்கே
“ஃபிரம் அட்ரஸ்” பெண்ணடா!

மாமிசத் துண்டல்ல – பெண்
சக மனிதரென்று எண்ணடா!

பாலியல் உணர்வின் ஆண் திமிரை
வர்க்க உணர்வால் வெல்லடா!

10.இறந்தபின்பு தன் கண்களை
தானம்தரச் சொல்லி இருக்கிறாள்
ஆசிட் வீச்சில் பலியான வித்யா,
அவள் கண்களில் விழிக்க
அருகதை ஆவோமா ஆண்கள்!

11.பெரிய திரைகளில்
மனிதக்கறி உரிக்கும்
குத்துப் பாடல்கள்…

சின்னத் திரைகளில்
எண்ணத்தை இசையவைக்கும்
கள்ள உறவு சீரியல்கள்…

நினைவில் வெறியாடும்
‘மெமரி’கார்டு வக்கிரங்கள்…

இலவச லேப்-டாப்பில்
விரியும் பாலியல் வலைகள்…

என்ன கண்டுபிடித்தாலும்
பெண்ணை விற்று காசு பார்க்கும்
முதலாளித்துவ வியாபாரிகள்!

இத்தனைக்கும் காவலிருக்கும்
இந்த அரசுதான்
பெண்ணின் பெரும் எதிரி!

12.இது போலி ஜனநாயகம் மட்டுமல்ல
இது காலி ஜனநாயகம்!

இங்கு போலிஸ்டேசன் சுவர்களுக்கும்
காமவெறி கண்ணிருக்கும்…

ராணுவ முகாம்களோ
“தேகப்’ பயிற்சியில் திளைத்தவை.

நீதிமன்றங்களோ
சட்டத்தின் ஆணுறைகளில்
முளைத்தவை.

ஊடகங்களோ
பெண்ணின் சதை விற்கும்
“டைம் பாஸ்கள்”

அரசின் உறுப்புகள் அனைத்தும்
ஆணுறுப்புகளால் ஆன நாடு இது!

இனி
சமூகப்புரட்சி மட்டுமே
பெண்ணுக்கு பெருந்துணை!

ரவிக்கை போடுவது தொடங்கி
செருப்பு போடுவது வரை
போராடியே கிடைத்தது!

ஆண்டைகளின் சாதியச் சட்டங்களை
வர்க்கப்போராட்டம் வெளுத்த வெளுப்பினால் தான்
முதலிரவு உரிமையும் கிடைத்தது.

பெற்ற தாயின்
முதல் பாலையும்
பறித்துக்கொண்ட நிலவுடமை ஆதிக்கத்தை
எரித்த வர்க்கத்தீயில் தானடா?
உனக்குத் தாய்ப்பாலும் கிடைத்தது.

நடப்பவை
சமூகக் குற்றங்கள் மட்டுமல்ல
இந்தச் சமூகமே குற்றம்!

புதிய சமூகத்திற்கான
புதிய ஜனநாயகப் போராட்டமே
நம் விடுதலையின் கர்ப்பம்!

ஆண்மை நீக்கம் எத்தனை பேருக்கு?
அனைத்தையும் சீரழிக்கும்
மறுகாலனியத்தை இந்த மண்ணை விட்டு நீக்கு!

– துரை. சண்முகம்

Source:
www.vinavu.com/2013/03/01/thiruvasakam-ds-kavithai/

சித்திரமும் கைப்பழக்கம்


சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.
– ( வெண்பா – 7 )

விளக்கம்:

பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.

Source:
http://ta.wikisource.org/wiki/ஔவையார்_தனிப்பாடல்கள்

 

அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து



babar_masjith

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

( பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில்
இடிந்து போய் எழுதியது என்று
கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை
தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில்
வெளிவந்துள்ளது..)

சொற்குற்றம்


யாரிடமும் எதுவும் பேசப் பயமாக இருக்கிறது
யாரிடமும் எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

சொன்னதைச்
சொல்லவேயில்லை என்கிறார்கள்
சொல்லாதைச்
சொன்னதாகச் சொல்கிறார்கள்

நினைத்ததைச்
சொன்னதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்
சொன்னதை
நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறைப்படுகிறார்கள்

ஒருவேளை
சொல்லவேண்டியதை நினைக்காமல்
நினைப்பதைச் சொல்லியிருப்பேனா?
ஒருவேளை
நினைப்பதைச் சொல்லாமல்
சொல்லவேண்டியதை நினைத்திருப்பேனா?

சொன்ன சொற்கள்
சொல்லாத சொற்கள்
சொல்ல நினைத்த சொற்கள்
சொல்ல மறந்த சொற்கள்
எல்லாச் சொற்களும் ஏய்க்கின்றன
எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

யானைப்பாகனின் பயத்தைப்போல
பாம்புப்பிடாரனின் பயத்தைப்போல
வெடிகுண்டு செய்பவனின் பயத்தைப்போல.

-சுகுமாரன்

Source:
http://vaalnilam.blogspot.in

தாயுமானவர்…!!


காலம் முழுவதும் காய்ச்சலுடன்
இருக்க ஆசை என்றேன் நான்….

ஏனடி பைத்தியமா உனக்கு என்றார்….

இல்லை….

உன் மடியில் நான் உறங்க
இரவெல்லாம் கண்விழித்து
ஒரு தாயாய் நீ எனை
சுமக்க….

உடலை வருத்திய
காய்ச்சலும் கூட எனக்கு
பிரியமான ஒன்றாகி போனதே
என் பிரியமானவனே என்றேன்..!

உன்னை வருத்தும் காய்ச்சலை
நான் வெறுத்து விட்டேனடி..!

ஆயுள் முழுவதும் உன்னை  என் மடியில்
நான் தாங்க காய்ச்சல் எதற்கு ?
என்று அவர் உருகிய
தருணத்தில்  மீண்டும் விழுகிறேன்
அவருடனான என் காதலில்…!!

Source:
http://www.penkural.com